8. அம்மா
எனக்கென ஒரு உயிரை தொடங்கியதால், உங்கள் பெயரை உயிரெழுத்தைக்கொண்டு தொடங்கினேனோ!
உங்கள் மெய்யின் நடுவில் எனக்கென ஒரு மெய் செய்ததால், மெய்யெழுத்துக்களின் நடு எழுத்தைக்கொண்டு உங்கள் பெயரை தொடர்ந்தேனோ!
உயிரையும் மெய்யையும் இணைத்து என்னை ஈன்று முடித்ததால், உங்கள் பெயரை உயிர்மெய் எழுத்தைக்கொண்டு முடித்தேனோ!
-ஆர்.கே
7. அடைமழை
மழையே,
பூமியில் நாங்கள்
செய்யும் தவறுக்காகவா
இப்படி எங்கள்
தலையில் கொட்டித்தீர்க்கிறாய்...?
ஒன்று
நீ விண்ணிலிருந்து
வெளி வர மறுக்கிறாய்.
இல்லை
எங்களை வீட்டிலிருந்து
வெளி வரத் தடுக்கிறாய்.
- ஆர்.கே
6. ஒரு தலை காதல்
நீ ஒரு முறை திரும்பிப் பார்ப்பாயா
என்று ஒவ்வொரு முறையும் திரும்பிப் பார்க்கிறேன்...
உன்னால் நான் பித்தனாகத் திரிகிறேன்...
உனக்கோ நான் ஜித்தனாகத் தெரிகிறேனோ...?
என்னை பார்க்காமலே செல்கிறாய்.
நீ விரும்பி என் கைகள் கோர்க்க வேண்டாம்...
திரும்பி என் கண்கள் பார்க்கலாமே...!
- ஆர்.கே
5. மூணாறு பயணம்
துரத்திச் செல்லும் கனவுகள் நிறைந்த காலை.
பணக்கவலை போக்கச் செய்யும் அலுவலக வேலை.
மனக்கவலை போக்க குடும்பத்துடன் உரையாடும் மாலை.
மற்ற பிரச்சனை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம் நாளை.
.
இது தான் எனது அன்றாட நாள்ஆனால் இன்றோ,
இயற்கையைக் கொண்டாடும் நாள்
.
ஆம்,
நேற்று மதிய ரயிலில்
மதுரை கிளம்பினோம்.
இன்று காலை
தேநீர் பருகி
தேனி கிளம்பினோம்.
.
பயணிக்க இரு சக்கர வாகனம்
நாளொன்றுக்கு ரூபாய் ஆயிரம் கட்டணம்
.
சுற்றியெங்கிலும் மரங்கள்
மரங்கள் பின்னே மலைகள்
மலைகள் மேலே விரிந்த வானம்
மயங்கிப் போனேன் அழகில் நானும்
.
தேனி வந்தடைந்தோம்.
தொடர்ந்து பயணித்தோம்
தொடர்ச்சி மலைகளில் பயணித்தோம்.
.
மூணாறு நோக்கிய நெடுஞ்சாலையில்
ஆறாய் சீராய்ப் பாய்ந்தோம்
.
திடீர் வித்தியாசம்
.
சுற்றியெங்கிலும் மலைகள்
மலைகள் பின்னே மலைகள்
மலைகள் மேலே மரங்கள்
மெய்மறந்து போனோம் நாங்கள்
.
எண்ணங்கள் ஏதும் என்னில் இல்லை
கனவுகள் யாவும் கண்ணில் இல்லை
முகத்தில் எவ்வித கலக்கமும் இல்லை
அகத்தில் எந்த கவலையும் இல்லை
.
வாகனத்தை உடனே நிறுத்தினோம்.
இயற்கையின் அழகை ரசிக்கத் தொடங்கினோம்
அழகை ரசிக்க இரு கண்கள் போதவில்லை
அந்த இடத்தை விட்டு நகரத் தோன்றவில்லை
.
வியப்பூட்டும் உயர்ந்த மலைகள்
திகைப்பூட்டும் மலைகளின் வளைவுகள்
சில வளைவுகளில் வேகம் காட்டினோம்
பல வளைவுகளில் வாலை சுருட்டினோம்
.
மூணாறை நெருங்க நெருங்க
வெப்ப நிலை ஒவ்வொன்றாக இறங்க இறங்கக்
குளிரில் நாங்கள் நடுங்கினோம்
இறுக்கமான உடைகளில் பதுங்கினோம்
.
பார்த்து ரசிக்க
பற்பல புது இடங்கள்
மூணாறு வருவதற்குள்
முந்நூறு புகைப்படங்கள்
.
மகிழ்ச்சியின் உச்சத்தை அடைந்தபோது
மூணாறின் உச்சத்தை வந்தடைந்தோம்
.
இடங்களுக்குச் செல்ல Googleன் வரைபடம்
அவ்விடங்களில் எடுத்த செல்ஃபி புகைப்படம்
என இரண்டு நாட்கள் இனிமையாக நகர்ந்தன
நினைத்துப் பார்க்க அழகான நினைவுகள் கிடைத்தன
-ஆர்.கே
4. ரயில் பயணத்தில் தேவை…
நான் ஏறுவதற்கு முன் என் இருக்கையில் அமரும் ஒரு பயணி...
நான் ஏறியபின் என் இருக்கையைக் கேட்கும் மற்றொரு பயணி...
.
என்னைப் பற்றிக் கேட்டறியும் ஒரு வயதானவர்...
நான் கேட்டறிய ஒரு பள்ளி மாணவர்...
.
கையசைவில் பேசிக்கொள்ள ஒரு குழந்தை...
கண்ணசைவில் பேசிக்கொள்ள ஒரு குமரிப்பெண்...
.
வாசித்து யோசிக்க நாளிதழ்…
நேசித்து வாசிக்கப் புத்தகம்…
.
ரயிலின் சத்தத்தில் ஒரு தூக்கம்...
அத்தூக்கத்தைக் கலைக்கும் ஒரு குழந்தையின் சத்தம்..
.
பயணம் முழுவதும் பருக தண்ணீர்...
நிறுத்தத்தில் பருக தேநீர்...
.
பசிக்காகப் புசிக்கும் ரயில் உணவு…
ருசிக்காகப் பசிக்கச்செய்யும் ரயில் சிற்றுண்டி…
.
காதோரம் இசை…
விழியோரம் இயற்கை…
ஜன்னல் ஓர தென்றல்…
மனதில் ஓர் தேடல்…
.
இறங்கும்பொழுது,
வருத்தம்! குழந்தையைப் பிரிவதால்…
ஏக்கம்! பெண்ணிடம் பேசாததால்…
தாக்கம்! வயதானவரின் அனுபவத்தால்…
.
நடைபாதையில் நடக்கும் பொழுது நடந்தது அனைத்தும் நினைவானது…
அடுத்த பயணத்திற்கான கனவு உருவானது…
ரயில் பயணங்கள் எப்போதும் சுகமானது…
(முன்பதிவு செய்திருந்தால்)😃
-ஆர்.கே
3. தயார்
மணமகள் கட்ட மஞ்சள் புடவை தயார்
மணமகளைக் கட்ட மாங்கல்யம் தயார்
புதிதாய் தொடங்க வாழ்க்கை தயார்
அதில் உன்னுடன் வாழ நானும் தயார்
உன் விரல்களைப் பிடிக்க என் விரல்கள் தயார்
நீ மெல்லமாய் கடிக்க என் காதுகள் தயார்
உனக்காக உருவாக்கிய அறைகள் தயார்
அதில் உன்னுடன் பேசப் பல உரைகள் தயார்
உன் நெற்றியில் கொடுக்க முத்தமும் தயார்
உன்னைக் கட்டியணைக்க நித்தமும் தயார்
நமக்கிடையே உருவாகச் சண்டைகள் தயார்
உடனே உன்னை மகிழ்விக்கக் கவிதைகள் தயார்
உன் கண் முன்னே எப்போதும் நிற்கத் தயார்
அப்போதும் உன் அழகை வர்ணிக்கத் தயார்
உனக்காக நான் சமைக்கும் உணவுகள் தயார்
இப்படி நாம் நினைவாக்கப் பல கனவுகள் தயார்
ஆனால்,
.
.
.
.
பெண்ணே நீ யாரம்மா?
சீக்கிரம் வந்து என்னைச்சேரம்மா,
வயதோ இருபத்தெட்டம்மா
இப்படிக்கு 90's kiduம்மா!!!
-ஆர்.கே
2. சுஜித்தின் தாய்க்கு
மகனை இழந்து தவிக்கும் தாயே,
அணைக்கும் கைகள்
அடக்கம் செய்தன!
அன்பை பொழிந்த கண்கள்
அஞ்சலி செலுத்தின!
கனவாக இருந்தவன் - இனி
நினைவாக மட்டுமே!
பயன்பாடற்ற கிணற்றால் - ஒரு உயிர்
பயனற்றதாகிற்றே!
இழப்பு உங்களுக்கு!
இழிவு நாட்டிற்கு.
யார் காரணம்?
ஆழமாக துளையிட்டு அதை மூடாத அந்த நிலத்தை ஆள்பவனா?
இல்லை, இத்தகைய பிரச்சனைகளில்
அளவாக தலையிட்டு அதை தீர்க்காத மாநிலத்தை ஆள்பவனா?
எவனாக இருந்தாலும்,
உனக்காக வருந்தமாட்டான்.
இனிமேலும் திருந்தமாட்டான்.
எவனையும் நம்ப வேண்டாம்.
இந்த (மா)நிலத்தில் இருக்கும் துளைகளிலிருந்து நம் பிள்ளைகளை பாதுகாக்க, அவர்களை
கண்களுக்கு மேலாக கருதி, கவனமாக வளர்ப்போம்.
நாட்டின் போக்கை சொல்லிச்சொல்லி வளர்ப்போம்.
கலங்காதே தாயே!
தான் உயிரோடு மீட்கப்பட்டிருந்தால்,
இப்பிரச்சனையின் தாக்கம் குறைந்திருக்கும் என்பதையும்
மக்களும் இதை சுலபமாக மறந்திருப்பார்கள் என்பதையும்
அறிந்துதான் உங்கள் மகன் உயிரை விட்டிருப்பான்.
இப்போது அவனின் புதைக்கப்பட்ட உடல், பல பெற்றோர்களின் மனதில் விதையாகும்.
நம் பிள்ளைகளை நாம் தான் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என்று அந்த விதை மரமாகும்.
மகனின் இழப்பிலிருந்து நீங்கள் மீண்டு வரவேண்டும் என்பதே
சுஜித்துக்காக பிரார்த்தனை செய்தோரின்
தற்போதைய பிரார்த்தனை.
கலங்காதே தாயே!
கடந்து வாருங்கள்.
-ஆர்.கே
1. இன்றைய காதல்
முதலில்,
அவளை அவன் மட்டும் நேசித்தான்.
அவளின் அன்பை மட்டும் யாசித்தான்.
பின்பு,
அவள் சரியென்றதும் சங்கீதமே வாசித்தான்.
தினமும் காதலையே காற்றாக சுவாசித்தான்.
ஒரு நாள்,
"வீட்டில் பேசுங்கள்" என்றவுடன்
சற்றே யோசித்தான்.
- ஆர்.கே